எல்லையில் தொடரும் துப்பாக்கி சூடு- பாக். வீரர் பலி- எல்லை வழி வர்த்தகம் நிறுத்தம்
ஸ்ரீநகர்: இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கோரமாக படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு பாகிஸ்தான் வீரர் உயிரிழந்தார்.
இரு இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கிருஷ்ணா காதி செக்டாரில் தொடர்ச்சியான பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இதில் குந்தி என்ற பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த பாகிஸ்தான் ஜவானின் பெயர் மொகைஉதீன் என்றும் தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.
தொடர் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம். பூஞ்ச்- ரவ்லா கோட் இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியேயான போக்குவரத்தை நிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 60க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இந்திய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. பாட்லா, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது என்றார்.
தற்போது பூஞ்ச் பகுதியில் 10-வது பிரிகேட் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அனேகமாக பிரிகேட் கமாண்டர் அளவிலான இருதரப்புக் கூட்டம் நடைபெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications