அழகிரி பிறந்தநாளில் அதிரடியாக 'என்ட்ரி கொடுக்கிறார் துரைதயாநிதி?

திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டு மு.க. அழகிரி கூடாரம் கலகலத்துப் போய்கிடக்கிறது. இந்த நிலையில் அழகிரியைப் புறக்கணித்துவிட்ட திமுக தலைமைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது மகன் துரைதயாநிதியை களம் இறக்க காத்திருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் நாள் மு.க. அழகிரியின் பிறந்தநாள்.
கிரானைட் முறைகேட்டில் சிக்கிய துரைதயாநிதி தப்பித்தோம் பிழைத்தோம் என முன்ஜாமீன் கிடைத்துவிட்டதால் மு.க. அழகிரி தமது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறோம் என்று கூறியிருந்தார். பின்னர் துரைதயாநிதியின் அரசியல் பிரவேசத்தையும் அறிவித்திருந்தார்.
இந்த அரசியல் பிரவேசத்துக்கு அச்சார நாளாக மு. க. அழகிரியின் பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல் கட்டமாக வரும் 27-ந் தேதியன்று கம்பத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு கிடைக்கப் போகும் ரெஸ்பான்ஸைப் பொறுத்தே பட்டையைக் கிளப்புவாராம் துரைதயாநிதி!
மதுரை போலீஸின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி:
இந் நிலையில் தயாநிதி மீதான கிரானைட் முறைகேடு வழக்கில், மதுரை போலீஸார் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் துரை தயாநிதி. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை போலீஸார் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆர்.எம்.லோதா, ரஞ்சன் கோகல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி, மதுரை போலீஸாரின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இதனால் அவரை இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications