குமரி அருகே நடுக்கடலில் சின்னமுட்டம் மீனவர்களை தாக்கி கடத்திய இடிந்தகரை மீனவர்கள்
குமரி: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்ன முட்டம் மீனவர்கள் 11 பேரைத் தாக்கிய இடிந்தகரை மீனவர்கள் அதில் 2 பேரை இடிந்தகரையில் சிறை வைத்துள்ளனர்.
குமரி அருகே உள்ள சின்னமுட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்த 35 மீனவர்கள் 7 வள்ளங்களில் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர்.
அவர்கள் விசைப்படகை முற்றுகையிட்டு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அதில் வீசினர். பின்னர் கடலில் மிதக்கவிடப்படும் பிளாஸ்டிக் பந்துகளால் சின்னமுட்டம் மீனவர்களை தாக்கினர். இதில் அந்த 11 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விசைப்படகில் இருந்த 11 மீனவர்களை அவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களுடன் இடிந்தகரைக்கு கடத்திச் சென்றனர். 11 பேரில் படகு உரிமையாளர் ஆனந்த் உள்பட 9 பேரை விடுவித்தவர்கள் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஜெகன், ஆந்திராவைச் சேர்ந்த குரு ஆகியோரை மட்டும் இடிந்தகரையில் சிறை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஆனந்த் கன்னியாகுமரியில் உள்ள கடலோர காவல் படையிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் அந்த 2 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இடிந்தகரை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இடிந்தகரை மீனவர்களோ தங்கள் இடத்தில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதாகவும், சின்ன முட்டம் மீனவர்களோ இரு தரப்புக்கும் பொதுவான ராதாபுரத்தில் நடத்தலாம் என்றும் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி, குளச்சல் மரைன் உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள 2 மீனவர்களை மீட்க இடிந்தகரை சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications