விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம்: 5 பேருக்கு பதவி பறிபோகிறது?
சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது..
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் அடிக்கடி அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் மாற்றப்படுவது வழக்கம். விசாரித்து பார்த்தால் அவர்களில் பலர் பல சிக்கலான காரியங்களில் மாட்டி விழி பிதுங்கி, தப்பித்தால் போதும் என இருப்பார்கள். கடைசியில் முதல்வர் ஜெயலலிதா செயலுக்கு பல்வேறு திசைகளில் இருந்து பாராட்டு குவியும்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.
தமிழக அமைச்சர்கள் சிலர் மீது கோஷ்டி பூசல், அதிக வசூல், அடாவடி வசூல், அரசு நலத்திட்டங்களில் அலட்சியம், துறை செயல்பாடுகளில் மைனஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அணி வகுத்து வருகின்றதாம். இதை உளவுத்துறை போலீசார் மூலம் முதல்வர் உறுதி படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்கும் முடிவில் ஜெயலலிதா இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்த முயற்சியை சிறிது காலம் தள்ளிப்போட்டாராம். அவர் எதிர்பார்த்த அளவுக்கு சில அமைச்சர்களின் நடிவடிக்கை இல்லையாம்.
இந்த நிலையில் அமைச்சர்களில் 5 பேரின் இலாகா பறிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியுள்ளது. ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என கூறப்படுகின்றது.
இந்த தகவல் தற்போது அதிமுக வட்டாரத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனால் அமைச்சர்கள் சிலர் இந்த ஹிட் லிஸ்ட்டில் யார் யார் உள்ளனர் என தெரியாமல் தவியாய் தவித்து வருகின்றார்களாம்.












Click it and Unblock the Notifications