தெலுங்கானா தனி மாநிலமா? ஹைதராபாத் தலைநகரா? டெல்லியில் ஆந்திர தலைவர்கள் முகாம்!
டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற அரை நூற்றாண்டு கால கோரிக்கையின் இறுதி கட்டம் பரபரப்பை எட்டியிருக்கிறது. எப்படியாவது தனி மாநிலத்தை அடைந்தே தீருவது என்ற கங்கணத்துடன் தெலுங்கானா தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் 10 மாவட்டங்களை உள்ளடக்கி தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்கான போராட்டங்களும் நெடியது. மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பு தெலுங்கானா பகுதி மக்களும் ஒரே குரலில் தனி மாநிலத்தை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் உச்சமாக ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்களும் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆந்திர மாநிலம் சட்டசபை தேர்தலை நடத்த உள்ள நிலையில் வரும் 28-ந் தேதிக்குள் தெலுங்கான குறித்த மத்திய அரசின் நிலை அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்திருக்கிறார்.
அஜ்மீர் தர்காவில் வழிபாடு
தற்போது ஜெய்ப்பூரில் காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டம் முடிவடைந்துவிட்ட நிலையில் தெலுங்கானா குறித்த அறிவிப்பு வெளியாக ஒருவார காலம்தான் இருக்கிறது. தங்களது கோரிக்கை வெல்ல வேண்டும் என்பதற்காக தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் அஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்திவிட்டு டெல்லியில் முகாமிட திட்டமிட்டிருக்கின்றனர். எப்படியும் தெலுங்கானா தனி மாநிலம் கிடைத்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது
தெலுங்கானா கிடைக்காது- கிரண்குமார்
ஆனால் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நேரடியாக ஹைதராபாத் திரும்பிவிட்டார். தெலுங்கானா தனி மாநிலம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் அப்படி ஒரு அறிவிப்பை மத்திய அரசு இப்போதைக்கு வெளியிடாது என்று கிரண்குமாரிடம் ராகுல் கூறியதாலேயே அவர் டெல்லி செல்லாமல் ஹைதராபாத் திரும்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
அறிக்கை கோரும் மத்திய அரசு
இதனிடையே தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளின் வேளாண் சாகுபடி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் ராயலசீமா தனி மாநிலமும் உருவாகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், ஆந்திர மாநில தலைமைச் செயலர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய போதே இந்த அறிக்கையை அவர் கோரியிருக்கிறார். இதனால் ராயலசீமா பகுதி தலைவர்களும் டெல்லியில் முகாமிடத் தொடங்கியிருக்கின்றனர்.
ஹைதராபாத் யாருக்கு?
தனித் தெலுங்கானா தொடர்பாக உறுதியான அறிவிப்பு வந்துவிடும் என்பதால் ஹைதராபாத்தான் அதன் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதில் ஒருதரப்பினர் உறுதியாக இருக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் தாமோதர் ராஜ நரசிம்ஹா, தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் மட்டுமே இருக்க வேண்டும் என்றார். ஆனால் மற்றொரு அமைச்சரான தனம் நாகேந்திரனோ, தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்க வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
போராட்டம் அறிவிப்பு
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் 28-ந் தேதிக்குள் தெலுங்கானா தனி மாநில அறிவிப்பை வெளியிடாவிட்டால் 100 நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெலுங்கானா பகுதி அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தின் உச்சமே கடந்த முறை அவர்கள் நடத்திய 42 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் என்பதால் இந்த போராட்ட அறிவிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
பற்றிய எரியக் காத்திருக்கிறது தெலுங்கானா தேசம்?












Click it and Unblock the Notifications