தாஜ் வணிக வளாக ஊழல்: மாயாவதி, சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
டெல்லி: தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கை விசாரிக்காமல் விட்ட சிபிஐக்கும் ஊழலில் தொடர்புடைய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி மீது தாஜ் வணிக வளாக ஊழல் புகார் எழுந்தது. இந்த ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் ராஜேஷ்வரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்காமல் சிபிஐ கைவிட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாயாவதிக்கும் சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாயாவதி மீதான ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதற்கு பேரமாகவே அவரது கட்சி எம்.பிக்களின் ஆதரவை மத்திய அரசு பெற்று வருகிறது. தற்போது மாயாவதியும் மத்திய அரசும் அதன் சிபிஐயும் ஒருசேர உச்சநீதிமன்றத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றனர்.