விட்டுட்டா போறே.. காதலி வாயில் நிச்சயதார்த்த மோதிரத்தை போட்ட காதலன்
ஆர்லான்டோ: அமெரிக்காவில் தன்னை விட்டு விட்டுப் போக முயன்ற காதலியின் வாயில் நிச்சயதார்த்த மோதிரத்தை வலுக்காட்டயமாக போட்டு விழுங்கச் செய்ய வற்புறுத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஆர்லான்டோ நகரைச் சேர்ந்தவர் பாரன் தாம்ப்சன். 29 வயதான இவரும், காதலியும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒரு வயதில் குழந்தை கூட உள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது.
இந்த நிலையில் திடீரென திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்தார் பாரனின் காதலி. இதனால் கோபமடைந்தார் பாரன். காதலியுடன் சண்டைக்குப் போனார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது தனது விரலில் மாட்டியிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து கழற்றி வைத்தார் காதலி.
அதைப் பார்த்து கோபமடைந்த பாரன், மோதிரத்தை எடுத்து காதலியின் வாயில் போட்டார். கட்டாயப்படுத்தி முழுங்குமாறு கூறினார்.ஆனால் வாயை இறுக முடிக்கொண்டார் காதலி. இதில் அவருக்கு மூச்சு முட்டியது. பின்னர் ஒரு வழியாக அவரிடமிருந்து மீண்டு, தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு தப்பி ஓடி வந்தார். அருகில் உள்ள வால்மார்ட் கடைக்குப் போன அவர் அங்கிருந்து போலீஸுக்குப் போன் செய்தார்.
விரைந்து வந்த போலீஸார் பாரனைக் கைது செய்தனர். அவரைப் போலீஸார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.