பி.ஆர்.பழனிச்சாமி மீது நிலமோசடி வழக்கு.. கொடுத்தார் சோனை!
மதுரை: மதுரை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது சோனை என்பவர் ஒரு புதுப் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை பனையூரைச் சேர்ந்தவர் சோனை. இவர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில்,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சாய்னாபுரம் கண்மாய் அருகே எங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2007-ம் ஆண்டு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் புரோக்கர்கள் மேலூர் சுந்தரம், மலையாளம், முத்துக்குமார் ஆகியோர் விற்பனைக்கு கேட்டனர். ஆனால் நாங்கள் அதனை விற்க மறுத்துவிட்டோம்.
பலமுறை அவர்கள் எங்களை சந்தித்து பி.ஆர்.பழனிச்சாமி உங்களை சந்திக்க விரும்புகிறார். உங்கள் நிலத்திற்கு அருகில் உள்ள இடங்களை அனைத்தையும் அவர் வாங்கிவிட்டார். எனவே உங்களுக்கு தண்ணீர் உள்பட எதுவும் கொண்டுவர பாதை இருக்காது என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி ராசுவிடம் நில வரி கட்ட சென்றபோது, உங்கள் நிலத்தை பி.ஆர்.பழனிச்சாமி வாங்கிவிட்டார். எனவே அவர் சொன்னால்தான் வரி கட்ட முடியும் என்று கூறினார்.
போலி ஆவணங்கள் மூலம் பி.ஆர்.பழனிச்சாமி எங்கள் நிலத்தை கிரையம் செய்துள்ளார். அதனை மீட்டு எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பி.ஆர்.பி. உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications