இலங்கை தூதரகம், சட்டசபை வளாகத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தா.பாண்டியன், சி.பி.ஐ. போராட்டம்
சென்னை: சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பாகவும் தமிழக சட்டசபை வளாகத்திலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று சட்டசபைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டசபைக்குள் நுழைவதற்கு முன்பாக நுழைவாயிலில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குணசேகரன், இலங்கையில் இனப்படு கொலை செய்த அதிபர் ராஜபக்சே இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
இதேபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தா.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தா. பாண்டியன், இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதற்கு இந்திய கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசின் அனுமதியுடன் இந்தியாவுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கிறோம். போரின் போது இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி, பொருளாதார உதவிகள் செய்துள்ளது. இனப்படு கொலைக்காக முப்படைகளையும் ஏவப்பட்டுள்ளது. ஆனால் ராடார் உதவி மட்டும் செய்தோம் என்று இந்திய அரசு கூறுகிறது. இந்திய அரசின் தவறான முடிவால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் மனித உரிமை அங்கு பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கைக்கு உதவி செய்தது மூலம் ராஜபக்சே மற்றும் இந்தியாவின் சாயம் வெளுத்துவிட்டது என்றார் அவர்.