வர்ற காசை வேண்டாம்னு சொல்லாதீங்க மதுரைக்காரர்களே...!
மதுரை: தொன்மையும், பாரம்பரியமும் மிக்க மதுரைக்கு சுற்றுலாத்துறை மூலம் அதிகரித்து வரும் பெரும் வருவாயை மனதில் கொண்டு, பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மதுரை மக்கள் மனதளவில் தயாராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை நகருக்கு வரும் வடமாநில சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் சிறு வியாபாரிகள் முதல் அனைவருக்கும் வருவாய் அதிகம் கிடைக்கிறத.
தென்னிந்தியாவின் காசி என ராமேஸ்வரம் அழைக்கப்படுகிறது. காசிக்குப் போவோர், ராமேஸ்வரம் போய் விட்டு அதன் பி்ன்னரே வீடு திரும்ப வேண்டும் என்று கூறுவார்கள். தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் மதுரை வழியாகவே ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்குச் சென்று வருகிறார்கள்.
மதுரைக்கு ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகக் கூறப்படுகிறது. இதில் 1 லட்சம் பேர் மட்டுமே வெளிநாட்டவர்கள். மீதமுள்ளவர்களில் 90 சதம் பேர் வடமாநிலத்தவர்.
மதுரைக்கு ரயில் மூலம் வரும், அவர்கள் மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகியவற்றைப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வடமாநிலத்தவரை நம்பியே ரயில் நிலையத்தின் முன்புள்ள சிறிய உணவகங்கள், டீக்கடைகள், சிறிய விடுதிகள் செயல்படுகின்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் வேலை வாய்ப்பையும் பெறுகின்றனர். அத்துடன் வடமாநிலப் பயணிகள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்ளிட்டவற்றுக்குச் செல்லும்போது பூ, மாலை, பழம், ஊதுபத்தி போன்றவற்றுடன், பாசி, ஊசி உள்ளிட்ட கைவினைப் பொருள்களையும் வாங்குகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வருவாய் பெருகின்றனர்.
மதுரைக்கு வரும் வெளிநாட்டவர் பெரும்பாலும் பெரிய ஹோட்டல்களில் தங்குகின்றனர். ஆகவே அவர்களால் சிறிய மற்றும் தெருவோர வியாபாரிகளுக்குப் பயனில்லை. ஆனால், வடமாநிலத்தவரால், கணவரை இழந்த பெண்கள், ஏழை மக்கள் என தெருவோர வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் பிழைக்கின்றனர்.
ஆகவே, வடமாநிலத்தவரை கவனத்தில் கொண்டு மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் சுற்றுலா வருவாயை அதிகரிக்க முன்வருவதே புத்திசாலித்தனம் என்பது மதுரை மக்களது கோரிக்கை. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசு சுற்றுலாத் துறை நிதி மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மதுரையில் ரூ.15 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிலும் டைல்ஸ் பதித்து பூங்கா அமைக்கப்பட்டுள்ளது அதில் முக்கியமான ஒன்று.
வடமாநிலத்தவரது வருகையால் சுற்றுலா வருவாய் அதிகரித்துவரும் நிலையில், அவர்களது வருகையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதே நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது.
திருப்பதி, சபரிமலை, குருவாயூர் ஆகிய இடங்களில் தமிழ் பக்தர்களுக்காக தமிழில் தகவல்கள் எழுதி வைக்கப்பட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது. அதேபோல பழனி, திருச்செந்தூரில் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆகவே பெயர்ப்பலகைகள், விவரக்குறிப்புகள் குறிப்பிட்ட மொழியில் இருக்கக்கூடாது எனக்கூறுவதும், மொழி உணர்வைக் சுட்டிக்காட்டி சுற்றுலாத் துறை வருவாயை முடக்குவதும் பாரம்பரிய, பழம் பெருமைமிக்க மதுரையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் மதுரை மாநகர தெருக்கள், சாலைகளின் பெயர்களை, தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதி வைக்க மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சி்த் தலைவர் அன்ஷுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எப்படிஇந்தியில் எழுத உத்தரவிடலாம் என்று அவர்கள் கேட்டனர். இதையடுத்து மன்னிப்பு கேட்ட கலெக்டர் மிஸ்ரா, உடனடியாக இந்தியை அகற்ற உத்தரவிட்டதோடு தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
மாற்றம் நல்லது என்றால் மாறலாம், தப்பே இல்லை...