4 வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த நிலையில் அடுத்து யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து உலவி வரும் நிலையில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ள செய்தி வந்துள்ளது.
இந்த நால்வரின் பெயர்கள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1993ம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 21 போலீஸாரை குண்டு வைத்துத் தகர்த்துக் கொன்றனர். இந்த வழக்கில் இந்த நான்கு பேருக்கும் மைசூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் போனது. உச்சநீதிமன்றமோ மேல்முறையீடு செய்த 7 பேரில் நால்வரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டது.
தற்போது அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் நாலவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.