வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை நிறுத்த சுப்ரீம் கோர்ட் மறுப்பு.. நாளையே நால்வருக்கும் தூக்கு?
டெல்லி/பெல்காம்: வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் தூக்குத் தண்டனையை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து நாளையே அவர்களைத் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோருக்கு பாலாறு வனப்பகுதி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த கருணை மனுவை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நிராகரித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கில் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கசாப், அப்சல் குரு ஆகியோரைப் போல இவர்களையும் ரகசியமாக தூக்கில் போட்டு செய்தியை மட்டும் வெளியில் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையடுத்து நால்வரையும் காப்பாற்ற அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நால்வருக்கும் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி சந்தீப் நாராயணன் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இதை நேற்று நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் நாராயணன், இவர்களின் தூக்கு தண்டனையை திங்கட்கிழமை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால், இதை அவசர மனுவாக ஏற்று விசாரிக்கும்படி கோரினார். ஆனால் 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பதற்கான முகாந்திரம் எதுவுமில்லை. தூக்கிலிடும் தேதி முடிவு செய்யப்படாத நிலையில், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்து விட்டது.
நாளையே தூக்கு
இதையடுத்து நால்வரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்று பெங்களூரில் உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தலைமைச் செயலாளர், டிஜிபி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி ககந்தீப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அப்போது தூக்கிலிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் தூக்கிலிடும் தேதியை மைசூர் கோர்ட் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளையே நால்வரும் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications