ஹெலிகாப்டர் பேரத்தில் சோனியா சகோதரிகளுக்கு தொடர்பு... சொல்கிறார் சுவாமி
இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து விவிஐபிக்கள் பயணம் செய்ய ராணுவத்துக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.4,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.400 கோடி லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ராணுவ அமைச்சர் அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, இந்த ஊழல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. வி.வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக முன்னர், வேறொரு நிறுவனத்தின் ஹெலிகாப்டரை தான் வாங்குவதாக இருந்தது. ஆனால், சில தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி அந்த நிறுவனத்தை மாற்றி விட்டார்கள்.
எல்லாமே கமிஷனுக்காகத்தான். இந்த கமிஷனில் பெரும் பகுதியை நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். இதில் சரிபாதி இத்தாலியில் வசிக்கும் சோனியா காந்தியின் இரு சகோதரிகளுக்கும் போய் சேர்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்திற்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. அதனால், இந்த ஊழல் தொடர்பான உண்மைகள் வெளியே வருவதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பவில்லை.நேரு-காந்தியின் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.