எனக்கு ஒரு கோடி தாங்க ..கள் இயக்கத்தினுக்கு குமரியார் கோரிக்கை
சென்னை: கள் ஒரு போதைப் பொருள் என்று நான் நிரூபித்துள்ளேன். எனவே எனக்கு வாக்களித்தபடி ரூ. ஒரு கோடி பணத்தை தர வேண்டும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தினருக்கு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு கள் இயக்கம், கள் குடித்தால் நோய் வராது என்று வெளியிட்ட அறிக்கையை படித்தேன். தமிழ்நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானி டாக்டர் ஹில்கையாபனம், பாளையில் சுரக்கும் சாற்றில், சுண்ணாம்பை கலந்து குடித்தால், அந்த பதநீரிலிருக்கும் மருத்துவ குணத்தால் சதையும், எலும்பும், பல்லும் வலுப்பெறும். ரத்தசோகை வராது. பதநீரில் இருக்கும் தையமின் இதயத்தசையை பாதுகாக்கும். மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும். குளுகோமா என்ற கண் நோய் வராது. இதுவே கள்ளானால், இக்குணங்களை இழந்துவிடும். கள்ளால் கண்பார்வைமங்கும். மூளை மழுங்கும். கால்கள் தள்ளாடும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, 2011-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், ஓய்வுப்பெற்ற நீதிபதி ஒருவரை நடுவராக கொண்டு எங்களோடு நீங்கள் வாதிட்டு, கள் ஒரு போதைப் பொருளே என்று நீதிபதியின் தீர்ப்பை பெற்றால், நாங்கள் கள் வேண்டும் என்று கேட்கமாட்டோம். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்போம் என்று கூறினார்.
இதனடிப்படையில் ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் நடந்த விவாதத்தில், கள் போதை பொருளே என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே எனக்கு ஒரு கோடி ரூபாய் தருவது நல்லுசாமியின் கடமையாகும். அந்த தொகையை அவர் தர வேண்டும் என்றார் குமரி அனந்தன்.