கையும் களவுமாக பிடிபட்டால் கற்பழிப்பு என்கிறார்கள்... பெண்கள் குறித்து கேரள எம்.பி பேச்சு!
சுதாகரனின் இந்தப் பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூர்நெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு சொன்னார் சுதாகரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கற்பழிப்பு வேறு, விபச்சாரம் வேறு. இரண்டையும் தனித் தனியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவ முடியும். இன்று சில பெண்கள் மனம் ஒத்து உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கையும் களவுமாக பிடிபட்டு விட்டால், கற்பழிப்பு என்று கூற ஆரம்பித்து விடுகிறார்கள். இது பேஷனாகி விட்டது.
மனம் விரும்பித்தானே செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். பிறகு ஏன் தப்ப நினைக்க வேண்டும். சூர்யநெல்லி சம்பவத்தில் கூட அந்தப் பெண் 40 நாட்கள் அந்த ஆண்களுடன் இருந்துள்ளார். சம்மதம் இல்லாவிட்டால் இருந்திருப்பாரா. கற்பழிப்பு என்றால் தப்பி ஓட முயற்சித்திருக்கலாமே... என்று கூறியுள்ளார் சுதாகரன்.
1996ம் ஆண்டு பள்ளிச்சிறுமியாக அப்போது இருந்த அந்தப் பெண் தனது கிராமமான சூர்யநெல்லியிலிருந்து கடத்தப்பட்டார். அதன் பின்னர் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 42 பேருக்கு அவர் இறையானார். கிட்டத்தட்ட 40 நாட்கள் அவரை பாலியல் ரீதியாக சீரழித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தற்போது ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள பி.ஜே.குரியனின் பெயரும் அடிபடுகிறது. அவரை கடந்த 2007ம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து உச்சநீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்பது சூர்யநெல்லி பெண்ணின் குற்றச்சாட்டாகும்.
இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் இப்படிப் பேசியுள்ளார்.