வாணியம்பாடி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றி கொலை?
வேலூர்: வாணியம்பாடி அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்து உள்ள கொடையாஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி என்கிற சுதாகர் (24). அவருக்கும் ராமநாயக்கன் பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் கோமதிக்கும் (21) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோமதி ஒரு பி.ஏ. பட்டதாரி. திருமணத்தின்போது அவருக்கு பெற்றோர் போதிய சீர் வரிசை செய்துள்ளனர்.
திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து சுதாகர் வீட்டில் உள்ளவர்கள் கோமதியை மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேங்காய் மண்டி வைக்க ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வருமாறு சுதாகர், தனது தாய் தமிழ்செல்வி மற்றும் சகோதரி கல்பனாவுடன் சேர்ந்து கடந்த வாரம் கோமதியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் கோமதி தனது பெற்றோரிடம் பணம் வாங்கி வர மறுத்துள்ளார். இந்நிலையில் சுதாகர் கோமதியின் சித்தி சகுந்தலாவுக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு போன் செய்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக கோமதியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடனே சகுந்தலா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கோமதியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு சகுந்தலாவிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கோமதியை கிருஷ்ணகிரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
இறக்கும் முன்பு கோமதி தனது சித்தியிடம், என் கணவன், மாமியார் மற்றும் நாத்தனார் சேர்ந்து என்னை வலுக்கட்டாயமாக ஒரு பாட்டிலில் இருந்த ஆசிடை குடிக்க வைத்தனர் என்று தெரிவித்துள்ளாராம். இது குறித்து அறிந்த கோமதியின் தாய் ரேவதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரே ஆண்டில் கோமதி இறந்துள்ளதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.