சேது சமுத்திர திட்ட எதிர்ப்பாளர்கள் இலங்கை ஆதரவாளர்களோ?: கி. வீரமணி
மதுரை: சேது சமுத்திர திட்டத்தை மறைமுகமாக எதிர்ப்பவர்கள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். சிலர் இந்த திட்டத்திற்கு இடையூறாக பேசி வருகின்றனர். இத்திட்டத்தை மறைமுகமாக எதிர்ப்பவர்கள் இலங்கைக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்ற சந்தேகம் எழுகிறது. காங்கிரஸ் அரசு தானாக முன்வந்து சேது சமுத்திர திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் 6வது வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழித்தடத்தை தேர்வு செய்தது அரசியல் கட்சிகள் அல்ல, நாக்பூரைச் சேர்ந்த நீரி என்ற அமைப்பின் நிபுணர்கள். அவர்கள் ஆய்வு செய்த பிறகே இதை தேர்வு செய்துள்ளனர். நீரி அமைப்பு சேது சமுத்திர திட்டத்தை துவங்கும் முன்பே மீனவர்களை அழைத்து மாநாடு நடத்தி இத்திட்டத்தால் மீன்வளம் பாதிக்கப்படாது என்று விளக்கம் அளித்தது. மத்திய அரசு உடனே சேது சமுத்திர திட்டப் பணிகளை துவங்க வேண்டும். இப்போது துவங்கினால் 6 மாதத்திற்குள் பணிகளை முடித்துவிடலாம். இதனால் தென் தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்படும். மேலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இலங்கை பிரச்சனையில் உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பார்வை மாறியுள்ளது. இலங்கையில் நடந்தது சுதந்திர போராட்டமா இல்லை தீவிரவாத இயக்கத்தின் போராட்டமா என்பது புரியாமல் இருந்த அவர்களுக்கு தற்போது தான் அது தமிழர்களின் சுதந்திர போராட்டம் என்று தெரிய வந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா. சபை, இந்தியா மற்றும் உலக நாடுகளை மதிக்காமல் நடந்து கொள்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக டெசோ அமைப்பு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதில் இருந்து நாங்கள் பின்வாங்கவே மாட்டோம். இந்த 2 பிரச்சனைகளுக்காக நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications