நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாத ப.சிதம்பரம்: இது லோக்சபா 'தேர்தல் பட்ஜெட்'!
டெல்லி: நேற்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மக்கள் மீது பெரிய அளவில் சுமையை ஏற்றாமல், சிறிய அளவில் சலுகைகள் கொண்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் விட்டுள்ளார் ப.சிதம்பரம்.
புதிய வரி விதிப்புகள் மூலம் ரூ. 34,700 கோடி கூடுதலாகத் திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வரிகள் மூலம் ரூ.30,00 கோடியும், மறைமுக வரிகள் மூலம் ரூ.4,700 கோடியும் கிடைக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்த மானியங்களுக்கான ஒதுக்கீடு ரூ.2,57,654 கோடியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் மானிய ஒதுக்கீடு ரூ.2,31,084 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 2,30,672 கோடியாகும். இது கடந்த பட்ஜெட்டை விட 14 சதவீதம் கூடுதலாகும்.
ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக இந்திய அடையாள அட்டை ஆணையத்துக்கு (யுஐடிஏஐ) ரூ. 2,620 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய கிரக ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ. 167 கோடி:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு ரூ. 6,275 கோடியும், விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு ரூ. 5,615 கோடியும், அணு சக்தித் துறைக்கு ரூ. 5,880 கோடியும், புவியியல் ஆராய்ச்சித் துறைக்கு ரூ. 1,281 கோடியும், செவ்வாய கிரக ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ. 167 கோடியும் (ஏற்கெனவே 2012-13 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ. 125 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஓட்டுக்கு குறி:
நாட்டின் பெரும்பாலாக வசிக்கும் விவசாயிகளின் ஓட்டுக்களை குறி வைக்கும் வகையில் இதுவரை இல்லாத அளவாக விவசாயக் கடன் வழங்க ரூ.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட இது ரூ.1.25 லட்சம் கோடி அதிகமாகும்.
இந்தத் துறையில் 3 புதிய திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.1,007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எஸ், ஓபிசி, சிறுபான்மையினர் வாக்குகளுக்கு...
சமூக நலத்துறைக்கு ரூ. 6,725 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 5,430 கோடி எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும். அதே போல சிறுபான்மையினர் நலனுக்கும் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம்-மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ. 150 கோடி:
கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் திட்ட செயலாக்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அணு சக்தி திட்டங்களுக்கான பிரிவின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய வர்க்கத்தினரைக் கவர ரூ.25 லட்சம் வரையிலான முதல்முறை வீட்டுவசதிக் கடன் பெறுபவர்கள் செலுத்தும் வட்டியில் மேலும் ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சலுகை பெற பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே போல வருமான வரி விகிதங்களிலும் எந்த மாற்றத்தையும் ப.சிதம்பரம் செய்யவில்லை.
மேலும் 12 சதவீதமாக உள்ள அடிப்படை சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த பட்ஜெட்டால் விலை அதிகரிக்கும் பொருள்கள்:
ரூ. 2,000-க்கும் அதிகமான விலையுள்ள செல்போன்கள்
ரூ. 21 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி ரக கார்கள், இறக்குமதி செய்யப்படும் கார்கள்.
800 சி.சிக்கு மேல் உள்ள இறக்குமதி செய்யப்படும் பைக்குகள்.
சொகுசு கப்பல்கள், விசைப் படகுகள்
ஏ.சி. உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள்.
2,000 சதுர அடி பரப்பு அல்லது ரூ. 1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள தனி வீடு, அடுக்குமாடி வீடு.
ரூ.50 லட்சம் மதிப்புக்கும் மேலான அசையா சொத்துகள்.
தரையில் பதிக்கப்படும் மார்பிள் கல்.
இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருள்களால் தயாரிக்கப்படும் பட்டுத் துணிகள்.
தொலைக்காட்சிப் பெட்டிக்கான செட்டாப் பாக்ஸ்கள்.
பட்ஜெட்டால் விலை குறையும் பொருள்கள்:
பிராண்டட் உடைகள்
லாரி சேஸிஸ்
விலைமதிப்புமிக்க கற்கள்
ஜவ்வரிசி
ஓட்ஸ்












Click it and Unblock the Notifications