ஜெர்மனி பெண்ணை கற்பழித்துவிட்டு 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாஜி டிஜிபி மகன் கேரளாவில் கைது

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார்.
பரோலில் வந்த அவர் தப்பித்துவிட்டார். மகனை தப்பிக்க வைக்க உதவியதாக பிபி மொஹந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார். இந்நிலையில் டெல்லி கற்பழிப்பு வழக்கை அடுத்து பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சி சேனல்களிலும், இணையதளங்களிலும் வெளியாகின.
இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் நபர் ஒருவேளை பிட்டியாக இருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு கடிதம் எழுதினர். கடிதம் கிடைத்தவுடன் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பிட்டியை கைது செய்தனர்.
இது குறித்து கேரள போலீசார் ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் கேரளா வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது. பிட்டிக்கு கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications