ஈழப் பிரச்சினை: காங், இந்திய அரசு நிலையை இனி மவுனமாகப் பார்க்க முடியாது! - டெசோ
சென்னை: ஈழப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது என்றும் தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான "டெசோ" தெரிவித்துள்ளது.
டெல்லி கருத்தரங்கு பின்னடைவு அல்ல
சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 7.3.2013 அன்று புதுதில்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சில ஊடகங்கள் திட்டமிட்டு எழுதி வருகின்றன. நாம் முன்வைத்த எந்தக் கோரிக்கையிலிருந்தும் பின்வாங்காத வரை நமக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. நாம் பல்வேறு கட்சிகளை அக்கருத்தரங்கிற்கு அழைத்திருந்தோம். இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் கருத்தரங்கில் பங்கேற்றன. இவர்கள் அனைவரும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் நாள் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுதில்லி கருத்தரங்கில் சர்வதேச பொதுமன்னிப்பு அவையின் இந்தியச் சார்பாளர் அனந்தபத்மநாபன் கலந்து கொண்டார். கூடுதலாக மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். உண்மை இவ்வாறிருக்க டெசோ கருத்தரங்கத்திற்குப் பின்னடைவு என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
காங்கிரஸ், இந்திய அரசு வெவ்வேறு நிலை
எனினும் காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசும் ஒவ்வொரு நாளும் ஈழப் பிரச்சனையில் வெவ்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வருவது கவலை தருவதாக உள்ளது. 7.3.2013 அன்று மக்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், ஐ.நா. அவையில் வரவிருக்கும் அமெரிக்க தீர்மானம் குறித்து உறுதியாகவும் தெளிவாகவும் யாதொன்றும் கூறவில்லை. இதனை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தைத் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆனால் அன்று மாலை டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்போம் என்பதாக உரையாற்றினார். ஆனால் 8-3-2013 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவித்து உரையாற்றிய, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் எந்த உறுதியும் வழங்காமல், தமிழ்ஈழத் தலைவர்களோடு சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
பொறுக்க இயலாத நிலை நெருங்குகிறது
காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய அரசின் இப்போக்கினைத் தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் டெசோ தன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதையும் இத்தருணத்தில் வெளிப்படுத்துகின்றோம். எனவே இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தர பொது வேலை நிறுத்தம் வருகிற 12-ம் நாள் நடைபெற்றே தீரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.அவ்வேளை நிறுத்தத்திற்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications