ஜெனிவா: ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் தாக்கல்!
ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
'இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறும் கடமையையும் மேம்படுத்துதல்" எனும் தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட எதுவும் இந்த தீர்மானத்தில் இடம்பெறவில்லை. இதேபோல் இலங்கையின் பொறுப்புக் கூறும் கடமைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையின் யோசனையை இத்தீர்மானம் வரவேற்றிருக்கிறது.
இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அமெரிக்காவின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.இலஙகையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களும் ஒடுக்குமுறைகளும் நீடித்து வருவதற்கும் அமெரிக்காவின் தீர்மானம் கவலை தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நேற்று முன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விவாதத்துக்காக நேற்று ஜெனீவா நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5.10 மணிவரையில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா, பாகிஸ்தான், சீனா, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்துள்ளனர். இந்த தீர்மனத்தில் உள்ள சொற்களை மாற்ற வேண்டும் என்பது இந்நாடுகளின் கோரிக்கை. இதே கருத்தை சியராலியோன், அங்கோலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.
ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் தீர்மானத்தில் இன்னமும் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற வேண்டும்.. மேலும் வலுவானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications