நீதிபதி சந்துரு ஓய்வு பெற்றார்.. காரை ஒப்படைத்துவிட்டு மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார்!

சொத்துப் பட்டியல் வெளியீடு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கே.சந்துரு நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சொகுசு காரை நேற்று காலையில் ஒப்படைத்தார்.பின்னர் நீதிமன்றத்தில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். மாலை 3 மணியளவில் வழக்கை விசாரித்து முடித்து தலைமை நீதிபதி சேம்பருக்கு சென்று தன் சொத்து கணக்கு விவரங்களை அறிக்கையாக கொடுத்தார். அப்போது, பதவி ஏற்கும்போது என் குடும்ப சொத்து விவரங்களை கொடுத்தேன். இப்போது என்னுடைய சொத்து விவரங்களை கொடுக்கிறேன். புதிதாக சொத்து வாங்கியதற்கான வருமான விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.
அப்போது, நீங்கள் என்னுடைய காரில் வரலாம். உங்கள் வீட்டில் இறக்கிவிட்டு செல்கிறேன் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் கூறினார். அதற்கு, தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு செல்வதாகவும், இதற்காக சீசன் டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன் என்றும் சந்துரு கூறினார்.
முக்கிய தீர்ப்புகள்..
இதன்பின்னர் நீதிபதி கே.சந்துருவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற பணியாளர்களிடம் விடை பெற்ற அவர், வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் எப்போதும் அமரும் பத்திரிகையாளர்கள் அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் அளித்த தீர்ப்புகளில், எல்லாமே மன திருப்தி அளித்தது. குறிப்பாக அங்கன்வாடி, சத்துணவு சமையல்காரர்கள் பணியிடத்துக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தேன். இதை அரசும் ஏற்றுக்கொண்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது. இதனால் தலித்துக்கள் சமைக்கும் சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடும்போது, சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மறையும்.அதேபோல தேனி மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பெண் பூஜை செய்வதை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்து, இந்து மதத்தில் பெண் தெய்வம் இருக்கும்போது, அந்த தெய்வத்துக்கு பெண் பூஜை வைப்பதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தேன்.
மதுரை மாவட்டத்தில் பொது சுடுகாடு சம்பந்தமாக பிறப்பித்த தீர்ப்பில், சமரசம் உலாவும் இடமே என்ற பாடலை மேற்கோள் காட்டியிருந்தேன். பிரிவு உபசார விழாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த விழாவில், ஓய்வுபெறும் நீதிபதியை புகழ்ந்து பேசுவார்கள். அதில் உண்மை இருக்காது. அதனால் பிரிவு உபசார விழா வேண்டாம் என்றேன்.ஓய்வுக்கு பின்னர் நீதித்துறை சம்பந்தமான பொறுப்புக்களை பெற மாட்டேன். ஒரு மூத்த வழக்கறிஞரால் எந்த அளவுக்கு சமுதாயப்பணி செய்ய முடியுமோ அதை செய்வேன் என்றார்.
பின்னர் தமது நண்பர்களுடன் மின்சார ரயிலில் ஏறி வீட்டுக்கு சென்றார்.
முன் உதாரணம்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் தாம் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று கூறி பிரிவு உபாசார விழாவை மறுத்தார். நாடு விடுதலை அடைந்த பிறகு சென்னை இப்படி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முன்னுதாரண நீதிபதியாக கே. சந்துரு திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications