டெசோ பந்த்: ஆம்பூரில் 100, மயிலாடுதுறையில் 25 திமுகவினர் கைது
வேலூர்: டெசோ வேலைநிறுத்தத்தையொட்டி ஆம்பூரில் கடைகளை மூடக்கோரி பேரணியாகச் சென்ற திமுகவினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இந்த வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதில் மாநில அரசு முனைப்பாக உள்ளது. இன்று பேருந்துகள், ரயில்கள் வழக்கும் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது. டெசோ வேலைநிறுத்தத்திற்கு வணிகர்கள் ஆதரவும் அவ்வளவாக இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் மயிலாடுதுறையில் சாலை மறியல் செய்ய முயன்ற திமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டையில் பந்துக்கு ஆதரவு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று விழுப்புரத்தில் 4,000 கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடைகளை மூடக்கோரி திமுகவினர் பேரணியாகச் சென்றனர். பேரணியாக சென்ற திமுகவினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications