சென்னையில் பயங்கரம்... அரசு மருத்துவமனையில் தேமுதிக செயலாளர் வெட்டிக் கொலை
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு்ள் நுழைந்த ரவுடிக்கும்பல் அங்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக செயலாளரை சரமாரியாக வெட்டிக் கொன்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 வழக்குகள்
சென்னை புது வண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் கோவில் கார்டன் 8-வது தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (41). தே.மு.தி.க. ஆர்.கே. நகர் பகுதி துணை செயலாளரான இவர் மீது 4 கொலை வழக்கு, 6 கொள்ளை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளன.
கடந்த 1-ந் தேதி முதுகுவலி காரணமாக பிரகாஷ் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று இரவு பிரகாசுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் 1-வது டவர் கட்டிடத்தில் 3-வது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் படுத்து தூங்கினார்.
இந்தநிலையில், நள்ளிரவு 12.15 மணி அளவில் பிரகாஷ் சிகிச்சை பெற்ற வார்டில் 7 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் நைசாக புகுந்து கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரகாசை சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. வலி தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்தார்.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்தனர். அதற்குள் 7 பேரும் தப்பி ஓடி விட்டனர். வார்டுக்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரகாசை காப்பாற்றுவதற்காக எமர்ஜென்சி வார்டுக்கு கொண்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களை சந்திப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. நள்ளிரவில் யாருமே நுழைய முடியாது. நோயாளிகள், பொதுமக்கள் என எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும். வெளியாட்கள் யாரும் வார்டுக்குள் எளிதாக நுழைந்துவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகளும் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில் கொலையாளிகள் 7 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து விட்டனர். வல்லுசேகர் என்பவரது கொலை வழக்கில் குற்றவாளிதான் தற்போது கொல்லப்பட்ட பிரகாஷ். வல்லுசேகரின் மாமனார் ஜோதி லிங்கம் தலைமையிலான கும்பல்தான் தற்போது பிரகாஷை போட்டுத் தள்ளியுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.