விலகுவோம் என்று கூறி 'சீன்' போடுகிறார் கருணாநிதி.. ராமதாஸ் சாடல்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்ர் ஆர்.வேலு கடந்த 2005-ம் ஆண்டில், திண்டிவனம் முதல் நகரி வரையில் 190 கி.மீ தொலைவிற்கு ரூ.750 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இன்று அந்த திட்ட பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று ராணிப்பேட்டையில் போராட்டம் நடைபெறுகிறது.
இலங்கை தமிழர்களுக்காக தமிழக மாணவர்கள் போராடி வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்தை அரசு தடுக்க கூடாது ஆதரவு தர வேண்டும். இலங்கை பிரச்சினையில் மற்றவர்களை விட அ.தி.மு.க. தான் முன் எடுத்து செல்ல வேண்டும் ஏனெனில் அவர்கள் தான் ஆளும் கட்சியாகவும் உள்ளனர்.
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை, பன்னாட்டு விசாரணை வேண்டும் இல்லையெனில் மத்திய அரசில் எங்கள் அமைச்சர்கள் விலகி கொள்ள வேண்டிய நிலை வரும் என கருணாநிதி கூறியிருப்பது நாடகத்தின் கடைசி கட்ட காட்சி ஆகும். இதிலேயாவது கருணாநிதி உறுதியாக இருப்பாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணியாக 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அதிலும் அரக்கோணம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். வருகிற ஏப்ரல் 25-ந் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டில் உத்தர பிரதேசமாநில முதல் - மந்திரி அகிலேஷ் யாதவ் கலந்து கொள்கிறார் என்றார் அவர்.
திமுக ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்- பாஜக
இதற்கிடையே, இலங்கை தமிழர் பிரச்சினையில் அலட்சியமாக செயல்படும் மத்திய அரசில் இருந்து திமுக விலக வேண்டும் என்று பாஜக யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போது மத்திய அரசில் ஒரு அங்கமாக திமுக இருக்கிறது. இலங்கையில் இறுதிக்கட்ட போரில் அராஜகம் நிகழ்ந்தபோதும் மத்திய அரசில்தான் திமுக இருந்தது.
இந்நிலையில், இலங்கை தமிழர்கள் நிலை குறித்து மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது. எனவே, மத்திய அரசு, பதவியில் நீடிக்க உரிமை இல்லை. மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக, மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும். மத்திய அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்றார் அவர்.