இந்த அமெரிக்கத் தீர்மானமும் ஈழத் தமிழர்களுக்கு விடியல் தராது...?
ஜெனிவா: இலங்கைக்கு எதிரான தீர்மானமாக பேசப்பட்டாலும் கூட ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள புதிய வரைவுத் தீர்மானமும் கூட ஈழத் தமிழர்களுக்கு பெரிய அளவில் விடியலையோ அல்லது விமோச்சனத்தையோ கொண்டு வந்து விடாது என்றே கூறப்படுகிறது.
காரணம், இந்த தீர்மானத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் முக்கியக் கோரிக்கையான இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருப்பது இது 2வது முறையாகும். முதல் தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது. தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டத்திற்குப் பின்னரே இந்த தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு முன்வந்தது.
தற்போது 2வது தீர்மானத்திற்கும் கூட மத்திய அரசு இதுவரை அமைதியாக கம்மென்றுதான் இருக்கிறது. இப்போதும் தமிழகத்தில் பெரும் போர் வெடித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர்களின் கிளர்ச்சி வெடித்துள்ளது. இதனால் மத்திய அரசு அதிர்ந்து போயுள்ளது. மேலும் மாணவர்களின் கிளர்ச்சி பெரும் மக்கள் போராட்டமாகவும் மாறி வருவதால் மத்திய அரசு மெளனம் கலைத்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த தீர்மானம் உதவுமா...
இது ஒருபக்கம் இருக்கட்டும்... உண்மையில் இந்த 2வது அமெரிக்க தீர்மானம் - தீர்மானம் தாக்கலாகி இதுவரை 4 முறை திருத்தி விட்டார்கள், அதாவது நீர்த்துப் போக வைத்து வருகிறார்கள் - உண்மையிலேயே ஈழத் தமிழர்களுக்கு உதவுமா, விடியலை ஏற்படுத்தித் தருமா.. என்றுகேட்டால் இல்லை என்ற பதில்தான் வருகிறது.

முக்கியக் கோரிக்கை இல்லையே...
காரணம், உலகத் தமிழர்களின் ஒரே கோரிக்கை, முக்கியக் கோரிக்கை - சிங்கள இனவாத ராணுவமும், அரசும் செய்த படு பாதகக் கொலைகள், போர்க்குற்றங்கள் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை தேவை என்பதுதான். ஆனால் இந்த வார்த்தையை தீர்மானத்திலிருந்து நீக்கி விட்டது அமெரிக்கா. தற்போது இறுதித் தீர்மானம் இப்படி இருக்கிறது...

ராணுவத்தினரை அகற்ற வேண்டும்
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும். போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது. போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும். எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.

நல்லிணக்கம் இல்லை
இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை. மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும். இவ்வாறு அந்த வரைத்தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றத்தில் தமிழர்கள்
இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஏற்க முடியாது என்று ஏற்கனவே ஈழத் தமிழர் தலைவர்கள் கூறியுள்ளனர். ஓரளவே ஏற்க முடியும் என்பது அவர்களின் கருத்தாகும்.

ஒரு பயனும் இருக்காது...
இந்தத் தீர்மானத்தால் எங்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைத்து விடப் போவதில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் இந்த தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச பார்வையைத் தீவிரப்படுத்த உதவுமா என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் அழுத்தமாக இருக்கிறது.
அந்த நம்பிக்கையில்தான், ஒன்றுமில்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, இதுவாவது நிறைவேறட்டுமே என்று அவர்கள் கருதுகின்றனர்.

சிங்களர்களுக்கு சாதகமே
இந்தத் தீர்மானத்தை கூர்ந்து உற்றுப் பார்த்தால் தமிழர்களுக்கு சாதகமானதாக தெரியாது. மாறாக சிங்களர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.

இலங்கையே விசாரித்தால் விளங்குமா...?
போர்க்குற்றம் புரிந்து நாடு இலங்கைதான். ஆனால் விசாரணையை அந்த நாடே நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தமானது என்பதை ப்ரீகேஜி குழந்தை கூட பளிச்சென சொல்லும். இந்த நிலையில் சர்வதேச விசாரணை குறித்த பேச்சே இந்த தீர்மானத்தில் இல்லாதது வியப்பாக உள்ளது.

இலங்கைக்கு சாதகமாக இந்தியா -அமெரிக்கா?
மேலும் தீர்மான விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையில் இந்தியா பகிரங்கமாக செயல்படுகிறது. அதேசமயம், மறைமுகமாக இந்தியாவின் கோரிக்கையின்பேரி்ல அமெரி்ககாவும் சாதகமாகவே உள்ளதாக கருதப்படுகிறது. இதனால்தான் நீர்த்துப்போன தீர்மானமாக இதை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications