தமிழகத்தில் புத்த பிட்சுக்கள் தாக்குதல் எதிரொலி: கொழும்பில் புத்த பிட்சுக்கள் ஆர்பாட்டம்
கொழும்பு: தமிழகத்திற்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் கோவிலுக்கு வந்த புத்த பிட்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் சென்னையிலும் புத்த பிட்சுவை விரட்டி தாக்குதல் நடத்தினர் தமிழ் ஆர்வலர்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். ‘வெட்கப்படுகிறோம் இந்தியா' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை சுமந்த அவர்கள் இந்தியா வரும் புத்த பிட்சுக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கிடையே, சென்னை மற்றும் தஞ்சாவூரில் புத்த சாமியார்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம், புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் குறைப்பு
இதனிடையே தமிழகத்தில் புத்த சாமியார்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை அடுத்து, கொழும்பிலிருந்து, சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பாதியாக குறைத்துள்ளது.
கொழும்பு-சென்னை வழித் தடத்தில், தற்போது ஒரு வாரத்துக்கு, 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதை, 14 விமானங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications