உதயநிதியின் வெளிநாட்டு காரால் ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்திய சிபிஐ!
வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.
இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் முறைகேடு நடந்ததாக 3 ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறையி்ன் புலனாய்விப் பிரிவான, Department of revenue intelligence, விவகாரத்தைக் கிளப்பியது. அப்போதே அதற்கான விளக்கத்தை ஸ்டாலின் தரப்பு தந்துவிட்டது.
இந் நிலையில் கார் இறக்குமதி நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மு.க. ஸ்டாலின் வீட்டிலும் அவரது நண்பர் ராஜா வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
இதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் வீட்டில் விசாரணை தான்.. சிபிஐ:
இந்த ரெய்ட் குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டீலர் அலெக்ஸ் ஜோசப். வரி மோசடி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை ஹைதராபாத் விமான நிலையத்தில் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்தோம்.
அவர் 33 கார்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இதில் 19 கார்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காரை வாங்கி இருக்கிறார்.
இதில் ஜோசப் பல்வேறு வகையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இது தொடர்பாகவே மு.க.ஸ்டாலின் வீட்டில் 'விசாரணை' நடத்தப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 19 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வருவாய் புலனாய்வு உயர் அதிகாரி மற்றும் 2 அதிகாரிகள் மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கார் இறக்குமதியில் ரூ. 20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், ஈரோடு, போடி உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.