அடையாறு புற்றுநோய் மையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தை தரம் உயர்த்தி சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சென்னை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தை தரம் உயர்த்துவது தொடர்பாக நான் ஏற்கனவே விடுத்த கோரிக்கை நிலுவையில் உள்ளது. அது பற்றி மீண்டும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
12-வது திட்ட காலத்தில் அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்தை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எனது கோரிக்கை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு அது நிலுவையிலேயே உள்ளது.
இந்த புற்று நோய் மையமானது தன்னார்வ அறக்கட்டளை சார்பில் 1954-ம் ஆண்டு மறைந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் சீரிய தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. இது தமிழக அரசின் உதவியுடன் தன்னார்வ தொண்டு அமைப்பாக 3 தலை முறையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இங்கு சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். எனவே இனிமேலும் மூன்றாந்தரமான சிகிச்சை மையமாக இது நீடிக்கக்கூடாது.
உலக நலவாழ்வு அமைப்பு, அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை, இந்தியாவின் சிறந்த சிகிச்சை மையமாக அங்கீகரித்துள்ளது.
எனவே, அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை, தன்னாட்சி அந்தஸ்து மிக்க தேசிய சிகிச்சை மையமாக தரம் உயர்த்த வேண்டும் என பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications