இலங்கை விவகாரம்: அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஆலோசனை
திருச்சி: இலங்கை விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சி சட்டக் கல்லூரியில் மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்த கட்ட போராட்ட முன்னெடுப்புகள் பற்றிய மாநிலம் தழுவிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி சட்டக் கல்லூரியில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான சீ.தினேஷ், சிபி லட்சுமணன் ஆகியோர் அனைத்துக் கல்லூரி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோ.திவ்யா, இளையராஜா ஆகியோரும் பங்கேற்று மாணவர்கள் போராட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
மாணவர்கள் இதுநாள் வரை நடத்திய போராட்டங்களின் போது மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் தங்களை சந்தித்து பேச வேண்டும் என்றும், அப்போது ஈழத் தமிழர்களின் நலனுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இது தொடர்பாக யாரும் மாணவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இதனால் கல்லூரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளை உடனடியாக திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கல்வி துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications