6 எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்- எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்குமா தேமுதிக?

தமிழக சட்டசபையில் தேமுதிகவுக்கு மொத்தம் 29 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர் அதிமுக ஆதரவாளர்களாக மாறியிருக்கின்றனர். இந்நிலையில் சட்டசபை அடிதடியால் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து ஓராண்டுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர் பின்னர் அவர்களது தண்டனைக் காலம் 6 மாத காலமாக குறைக்கப்பட்டது. இதனால் தேமுதிகவின் பலம் 23 ஆனது. 5 பேர் அதிருப்தியாளர்களாக மாறி இருப்பதால் தேமுதிகவுக்கு 18 எம்.எல்.ஏக்கள்தான் கணக்கு.
பொதுவாக ஒரு கட்சிக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி அந்தஸ்து பறிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. இருப்பினும் சட்டசபைக்குள் சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்கக் கூடியவர். இதனால் அவர் எந்த முடிவு எடுத்தாலும் அதாவது தேமுதிகவின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறித்து தீர்ப்பளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி தேமுதிகவின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிப்பதன் மூலம் ஒரு அரசியல் ஆதாயத்தை ஆளும் அதிமுக அடையவும் வாய்ப்பிருக்கிறது. தேமுதிகவின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறித்தால் 23 எம்.எல்.ஏக்கள் கொண்ட திமுகவுக்குதான் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் தேமுதிக, திமுக இரண்டும் 23 எம்எல்ஏக்கள் கொண்டிருப்பதால் யாருக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சனையும் வரலாம்.
தேமுதிகவும் திமுகவும் தேர்தல் கூட்டணிக்கு தயாராகி வரும் நிலையில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை ஏற்பதில் நெருக்கடி வரும். அப்படி ஏற்றுக் கொண்டால் தேமுதிக- திமுக இடையேயான நெருக்கத்தை தகர்த்துவிடலாம் என்பது அதிமுகவின் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications