அபார்ட்மெண்ட் வாங்கலையோ அபார்ட்மெண்ட்!
பெங்களூர்: ஒரு நாட்டின் பொருளாதாரம் நல்ல தூக்கத்தில் இருக்கிறதா, பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறதா என்பதை இரண்டு விஷயங்களை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒரு ரூபாய்க்கு கார்...
ஒரே ஒரு ரூபா கட்டிட்டு காரை வாங்கிட்டுப் போங்க. அடுத்த 12 மாசத்துக்கு எதுவுமே கட்ட வேண்டாம், அப்புறமா இ.எம்.ஐ. கட்டினால் போதும் என்று எப்போது ஒரு கார் நிறுவனம் கூவிக் கூவி விளம்பரம் செய்கிறதோ..
அதே போல, வுட்ஸ் வியூ, கிளவுட் வியூ என்று ஏதாவது பெயரில் ஒரு அப்பார்ட்மெண்ட் 14 லட்சம் தான்.. 1 லட்சம் மட்டும் கட்டி பதிவு செய்யுங்க.. பேலன்ஸ் அப்புறம் பார்த்துக்கலாம் என்று எப்போது ரியல் எஸ்டேட்காரர்களும் கூவுகிறார்களோ..
மேலே சொன்ன இரண்டுமே நல்ல குறட்டை விட்டுக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல உதாரணங்கள். இந்த இரண்டுமே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டுள்ளன என்பது தான் உண்மை.

என்னாது 12 லட்சத்துக்கு அபார்ட்மெண்டா?
கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பார்த்திராத விளம்பரங்கள் எல்லாம் இப்போது வர ஆரம்பித்துள்ளன. பெங்களூர், மும்பையில் 12 முதல் 18 லட்சத்துக்கு அபார்ட்மெண்ட் என்று பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன. இது உண்மை தானா, அல்லது நாமும் நாட்டின் பொருளாதாரத்தைப் போலவே ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண்கிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு உள்ளன இந்த விளம்பரங்கள்.

லோன் வாங்கலையே லோன்...
பொருளாதார தேக்க நிலை காரணமாக கார்கள், வீடுகள் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. லோன் வாங்கிக்குங்க என்று வங்கிகள் வாடிக்கையாளர்களைத் தேடி லோ லோ என அலைந்து கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு வேலையைக் காப்பாற்றிக் கொள்வதே முதல் வேலை, ஊதிய உயர்வுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை, இதனால் எந்த வகையிலும் அகலக் காலை வைத்துவிடக் கூடாது என்று ஜாக்கிரதை காட்டி வரும் பொது ஜனங்கள், வங்கிகளின் மார்க்கெட்டிங் கால்கள் வந்தால் உடனே கட் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர்.

ஒன்டு குடித்தனமாகும் அபார்ட்மெண்ட்கள்...
பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்துவிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்ட முடியாமல் திணறுகின்றனர்.
இதனால், அபார்ட்மெண்ட்களின் விலைகளை அடியோடு குறைத்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வீடுகளின் அளவும் குறைந்து போனது தான். கிட்டத்தட்ட ஒன்டு குடித்தனம் அளவுக்கு அபார்ட்மென்ட்களின் அளவை குறுக்கி விலைகளைக் குறைத்து விற்க ஆரம்பித்துள்ளனர்.

சோப்பு சைஸ் மாதிரி...
சோப்புகள், டீ பாக்கெட்டின் விலையை ஏற்றாமல் அளவை மட்டும் குறைத்து விற்க ஆரம்பித்துள்ளார்களே, அதே மார்க்கெட்டிங் வேலையை ரியல் எஸ்டேட்காரர்களும் இப்போது கையில் எடுத்துள்ளனர்.
ஒரு பெட்ரூம் கொண்ட சிறிய வீடுகளின் அளவு சுமார் 100 சதுர அடிவரை சுருக்கப்பட்டுள்ளது. 650 சதுர அடி இருந்த வீடுகள் இப்போது 550 சதுர அடியாக சுருக்கப்பட்டு விலையும் குறைக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
அதே போல 2 பெட்ரூம் கொண்ட 1,400 சதுர அடி வரை நடுத்தர அபார்ட்மெண்ட்களின் அளவு 1,100 சதுர அடியாக சுருக்கப்பட்டு வருகிறது.

1,500 சதுர அடியான 4,500 சதுர அடி
பெங்களூரில் பிரிகேட் மெடோஸ் என்ற பெயரில் 1,200 முதல் 1,600 சதுர அடி அளவுக்கு அபார்ட்மெண்ட்களை கட்ட ஆரம்பித்த பிரிகேட் நிறுவனம் அதன் அளவை 950 முதல் 1,150 சதுர அடியாகக் குறைத்துவிட்டது. 2,700 முதல் 4,500 சதுர அடி அளவுக்கு அபார்ட்மெண்ட்களை கட்டி வந்த சென்சூரி ரியல் எஸ்டேட் நிறுவனம் இப்போது ராஜராஜேஸ்வரி நகரில் கட்டும் புதிய வீடுகளின் அளவை 1,100 முதல் 1,500 சதுர அடியாகக் குறைத்துவிட்டது.
இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications