அதிமுகவின் வெற்றிக்காக உழைத்த தேமுதிகவுக்கு ஏற்பட்ட இந்த நிலை... கருணாநிதி
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் தோழமை கொண்டு அவர்களின் வெற்றிக்காக உழைத்த தோழமைக் கட்சிக்கு ஏற்பட்ட நிலை இது. இதையொட்டி கடந்த காலங்களில் பேரவையில் நடைபெற்ற சில சம்பவங்களை நினைவூட்டினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
24-11-1986ல் எம்.ஜி.ஆர் ஆட்சியில், மொழி போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்திய அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக, பேரவைத் தலைவர், திமுகவைச் சேர்ந்த பேராசிரியரையும் மற்றும் எஸ். பாலன், ஏ.செல்வராசன், பரிதி இளம்வழுதி, பி.பொன்னுரங்கம், கோவை எம்.ராமநாதன், தர்மபுரி ஆர்.சின்னசாமி, ஆலந்தூர் ம.ஆப்ரகாம், மதுராந்தகம் சி.ஆறுமுகம், அரக்கோணம் வி.கே.ராசு ஆகியோரையும் பேரவையிலிருந்து நிரந்தரமாக நீக்கி தனது தீர்ப்பை படித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட அந்தத் தீர்மானத்தைத் திரும்பப் பெற அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கடைசிவரை முன்வரவில்லை.
28-12-1988ல் சட்டப் பேரவையில் நடைபெற்றது என்ன? ஜா அணியினரும், ஜெ அணியினரும் அவையில் உள்ள மைக்குகளைக் கையில் பிடுங்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு, பேரவை வரலாற்றில் இல்லாத மிகப் பெரிய ரகளையைச் செய்ததை தமிழகம் மறந்துவிட்டதா என்ன?. உள்கட்சி விவகாரம் சட்டப்பேரவைக்கு வந்து ஊர் சிரித்ததைப் பார்த்து நாடே சிரித்தது.
மற்றொரு உதாரணம் 1991ம் ஆண்டு சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியில் ஜூலை 4ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றத் தொடங்கிய போது, பாமக உறுப்பினராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு அறிக்கையை அவையில் ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினார்.












Click it and Unblock the Notifications