திடீர் வெள்ளம்: பவானி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
மேட்டுப்பாளையம்: முன்னறிவிப்பு எதுவும் இன்றி பவானி ஆற்றில் வெள்ளநீரை திறந்துவிட்டதில் குளித்துக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், எல்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (53). இவரது மனைவி ராணி (42). இவர்களது மகள்கள் ராஜேஸ்வரி (22), சாந்தினி (20), ஜனனி (18).
புதன்கிழமை காலை 11 மணியளவில் ரவிச்சந்திரன், அவரது மனைவி ராணி, மகள்கள் ராஜேஸ்வரி, ஜனனி, பேத்திகள் பெப்பி, நிக்கி ஆகிய 6 பேரும் குளிப்பதற்காக பவானி ஆற்றுக்குச் சென்றனர்.உப்புபள்ளம் அருகிலுள்ள பவானி ஆற்றில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பில்லூர் அணையிலிருந்து காலையில் திடீரென தண்ணீர் திறந்து விட்டனர். எதிர்பாராமல் வந்த வெள்ளநீரில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், மனைவி, மகள்கள், பேரக் குழந்தைகள் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ராணி உட்பட அனைவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ரவிச்சந்திரன் மட்டும் நீந்திக் கரை சேர்ந்தார். தன் கண்முன்னாலேயே குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்ததைக் கண்டு ரவிச்சந்திரன் கதறி அழுதார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications