தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் ஜெ. அன்பழகன், சிவசங்கர் திடீர் சஸ்பென்ட்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஜிபிஎஸ் கருவிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் சார்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி , போக்குவரத்து கழக முறைகேடு என பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.. இந்தக் குற்றச்சாட்டைக் கூற மு.க. ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று பேசினார்.
கூண்டோடு வெளியேற்றம்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்தக் கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்கவும் திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதை நிராகரித்த சபாநாயகர், திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் வெளியேற்றப்பட்டனர்.
2 எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்
பின்னர் அவை முன்னவரான ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, சபையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்களான ஜெ. அன்பழகன், சிவசங்கர் ஆகியோரை சஸ்பென்ட் செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார். இத்தீர்மானம் சபையில் ஒருமனதாக நிறைவேறியது. இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், சிவசங்கர் ஆகியோர் 2 நாட்களுக்கு சட்டசபையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சட்டசபையில் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications