கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை… 3 வது கட்ட போராட்டம் அறிவிப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் அணு உலைக்கு எதிராக மூன்றாவது கட்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மூன்று நாட்களாக மக்கள் மத்தியில் அச்சத்தை, பீதியைக் கிளப்பும் வகையில் கடுமையான சப்தமும், புகையும், நாற்றமும் அணுஉலையிலிருந்து வெளிப்படுகிறது.
மார்ச் 30, 2013 அன்று இரவு முழுவதும் டயர் எரிக்கப்பட்டது போன்ற கடுமையான நாற்றம் அணுஉலையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அடர்த்தியான கரும்புகையும், வெள்ளைப் புகையும் மாறி மாறி வெளியேற்றப்படுகிறது
ரஷ்யாவிலிருந்து வந்த தரமற்ற உபகரணங்களையும், உதிரிப் பாகங்களையும் கொண்டு கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலயத்தில் அடிக்கடி தீ விபத்தும், மரணங்களும் சம்பவித்து வருகின்றன.இந்த தாங்கமுடியாத சப்தம் மற்றும் புகையினால் அப்பகுதி மக்கள் கடுமையான கண் எரிச்சலால் அவதியுறுகின்றனர்.
குழந்தைகளும், வயோதிகர்களும் அச்சத்தால் நடுங்கி மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். கர்ப்பிணிப் பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் சிசுக்கள் பாதிக்கப்படுமோ என்ற பயத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் அணுமின் நிலையங்களைக் கட்டிவிட்டு, உலையின் அருகே வாழும் மக்களுக்கு எந்தவிதமான பேரிடர் பயிற்சியும் தராது, எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்காது, எங்கள் மக்களைக் கீழ்த்தரமான உயிர்களாக நடத்துகிறது.
உண்மைக்குப் புறம்பாக எதேச்சாதிகாரமாக நடக்கும் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தைக் கண்டித்து, ஏப்ரல் 3, 2013, புதன் கிழமையன்று செட்டிக்குளம் அணுமின் நகரியத்தை முற்றுகையிடுவதெனத் தீர்மானித்திருக்கிறோம். அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்ட மீனவ மக்கள் கடலுக்குச் செல்லாது தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு அறிவித்துள்ளது.