குடிசை மாற்று வாரியம் மூலம் 3,500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்:
மாறுபட்ட தட்ப வெட்ப நிலை, குடியிருப்புகளை உபயோகித்தல், சுற்றுப்புற சூழல், அடுக்குமாடிக் குடியிருப்புகளில், குடியிருப்புதாரர்களால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், குடியிருப்புகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், போன்ற காரணங்களினால் பல குடியிருப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் பழுதடைந்து வலு குறைந்துள்ளன.
இக்குடியிருப்புகளின் கட்டமைப்பு வலுவிழந்துள்ளதுடன் தளங்களில் உள்ள கம்பிகள் காற்றிலுள்ள உப்புத்தன்மை காரணமாக துருப்பிடித்துள்ளன. இத்தகைய குடியிருப்புகளில் வாழும் ஏழை, எளிய மக்கள் மழைக் காலங்களில் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கான சராசரி ஆயுட் காலம் 70 ஆண்டுகள் என்றிருந்தாலும், பெரும்பாலான குடியிருப்புகள் வலு குறைந்து அவற்றின் ஆயுட் காலம் முடியும் முன்னரே தகுதியற்றவைகளாக ஆகிவிடுகின்றன. எனவே, வலுவிழந்த கட்டடங்களை இடித்துவிட்டு புது வீடுகள் கட்ட எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மிகவும் பழுதடைந்த 3,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 2013-2014ம் ஆண்டில் மீண்டும் 3,500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் 280 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ரங்கநாதபுரம் திட்டத்தின் கீழ் 480 குடியிருப்புகளும், பார்த்தசாரதி நகர் திட்டத்தின் கிழ் 120 குடியிருப்புகளும், பெரம்பூர் தொகுதியில், சத்தியவாணி முத்துநகர் திட்டத்தின் கீழ் 392 குடியிருப்புகளும், எழும்பூர் தொகுதியில் நேரு பார்க் திட்டத்தின் கீழ் 288 குடியிருப்புகளும், பிள்ளையார் கோயில் தெரு திட்டத்தின் கீழ் 32 குடியிருப்புகளும், சேப்பாக்கம் தொகுதியில் லாக் நகர் (நாவலர் நகர்) திட்டத்தின் கீழ் 304 குடியிருப்புகளும், அயோத்தியா குப்பம் திட்டத்தின் கீழ் 708 குடியிருப்புகளும், சைதாப்பேட்டை தொகுதியில் கோட்டூர்புரம் திட்டத்தின் கீழ் 136 குடியிருப்புகளும், மயிலாப்பூர் தொகுதியில் ஆண்டிமான்ய தோட்டம் திட்டத்தின் கீழ் 42 குடியிருப்புகளும், பல்லக்குமான்யம் திட்டத்தின் கீழ் 48 குடியிருப்புகளும்,
கோவை மாவட்டத்தில் ஆடுதொட்டி திட்டத்தின் கீழ் 246 குடியிருப்புகளும், திருச்சி மாவட்டம்
பீச்சான்குளம் திட்டத்தின் கீழ் 587 குடியிருப்புகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை கூடைமுடைவோர் காலனி திட்டத்தின் கீழ் 117 குடியிருப்புகளும் என ஆக மொத்தம் 3,500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் அரசின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் வீட்டுவசதித் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.