பெண் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடும் இந்திய சகோதரர்களுக்கு அமெரிக்க விருது
வாஷிங்டன்: சமூக சேவையில் ஈடுபட்ட இந்திய சகோதரர்களுக்கு ஒருமைப்பாடு விருதை கொடுத்து அமெரிக்கா கெளரவப்படுத்தியுள்ளது.
இந்தியச் சகோதரர்களான ரவி, ரிஷி, நிஷி ஆகிய மூன்று பேர் அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் "சக்தி வாகினி" என்ற ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த அமைப்பின் மூலம், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தும், கடுமையான சட்டம் இயற்ற வேண்டியும் போராடி வருகின்றனர்.
இவர்களின் சமூக சேவையைப் பாராட்டி நேற்று வாஷிங்டனில் உள்ள கென்னடி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், இந்திய சகோதரர்களுக்கு ஒருமைப்பாடு விருதை வழங்கி கவுரவித்தார்.
பாகிஸ்தானில் பெண் கல்வியை வலியுறுத்தி பேசி வந்ததால் சுடப்பட்ட சிறுமி மலாலா யுசூப் சாய்க்கு "உலக வழிக்காட்டியர்களுக்கான விருதும்" வழங்கி கவுரவிக்கப்பட்டது.