கூடங்குளம் அணு உலைகள் பாதுகாப்பானவை: ரஷ்ய நிபுணர் குழு தலைவர்
நெல்லை: உலகத்திலுள்ள அணு உலைகளிலேயே மிகவும் பாதுகாப்பானவை கூடங்குளம் அணுஉலைகள் தான் என்று ரஷ்ய நிபுணர் குழுவின் தலைவர் யேவ் ஜேனி நுட்கின் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள முதலாவது அணு உலை மிகவும் தரம் குறைந்தது எனவும், அந்த அணு உலைக்கு தரமற்ற உதிரி பாகங்களை சப்ளை செய்த 2 ரஷ்ய கம்பெனிகளின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அணுசக்தி எதிர்ப்பு இயக்க ஓருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்தபணிகளை ஆய்வு செய்ய ரஷ்ய அணுசக்தி நிபுணர் குழுவின் தலைவரான யேவ் ஜேனி நுட்கின் வந்தார். அவரும்,அவருடன் வந்த ரஷ்ய குழுவினரும் முதலாவது அணு உலையின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதலாவது அணுஉலையில் வெப்ப நீர் ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தபரிசோதனையில் ரஷ்ய கம்பெனிகளால் சப்ளை செய்யப்பட்ட உதிரிபாகங்கள் அனைத்தும் நல்ல தரத்தில் இருந்தன. அணு உலையில் தர மேலாண்மை நிர்வாகத்தை பேணுவதில் ரஷ்ய அரசு எந்த தளர்வையும் யாருக்கும் வழங்கவில்லை.
அணு உலைக்காக வாங்கப்பட்ட அனைத்து பொருட்களும் சர்வதேச தரத்தில் உள்ளன.முதலாவது அணு உலையின் அனைத்து பகுதிகளையும் இந்திய,ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாகஆய்வு செய்துள்ளனர். பல பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிபுணர்குழுவில் யாரேனும் ஒருவர் தரம் குறித்து கேள்வி எழுப்பினால் அதை உடனே நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அணுஉலையில் தரம் குறைந்த பொருட்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
விவிஇஆர் 1000 தொழில்நுட்பம் கூடங்குளம் அணு உலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வடிவமைத்த ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்பர்ட்ஸ் என்ற நிறுவனம் ஏற்கனவே இதே போன்று சைனாவில் 2அணு உலைகளை சப்ளை செய்துள்ளது. அவைகள் நன்றாக இயங்கி வருகின்றன. வருங்காலத்தில் கூடங்குளம் அணுஉலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றியே அணு உலைகளை நாம் அமைப்போம் என்றார்.