கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுங்கள்... பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: நாகப்பட்டினம் அருகே கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் 120 இலங்கைத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,
வணக்கம். துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஏப்ரல் 2 ஆம் நாள், தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.
தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்று, (6.4.2013 ) அதிகாலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து, 120 ஈழத்தமிழர்கள், இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.
தமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது. 120 பேர்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையின் உதவியோடு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தங்களை வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.