மார்ச்சில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு யாவாரம் கம்மிதான்...ஆய்வு
வாஷிங்டன்: கடந்த சில மாதங்களைப் பார்க்கும் போது, அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜனவரியில் 1,77,000 பேர்என்றும், பிப்ரவரியில் 2,37,000ஆகவும் இருந்த ஆள் சேர்ப்பு கடந்த மாதம் 1,58,000 ஆக குறைந்துள்ளதாக அமெரிக்க சம்பள தகவல் தொகுப்பு மையம் தெரிவித்துள்ளது.
புதிய ஆள் சேர்ப்பு இல்லை:
கட்டுமான கம்பெனிகளில் கடந்த மார்ச்-ல் புதிதாக ஆள் சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லையாம். கடந்த மார்ச் மாதத்தில் வெறும் 29,000 ஆட்களுக்கு மட்டுமே பணிநியமணம் வழங்கியதாம்.
சாண்டி புயல் பாதிப்பு:
மோடீ'ஸ் அனாலிடிக்ஸ்-ன் தலைமை பொருளாதார வல்லுனர் மார்க் ஸாண்டி இது குறித்து கூறும்பொழுது, ‘ சாண்டி புயலினால் பெருமளவில் கட்டிட பாதிப்பு இருந்தது. எனவே, கட்டுமானத் தொழிலில் பெரும் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்து விட்டது' என்றார்.
எதிர்பார்ப்பு பொய்யானது:
1,95,000 வேலை வாய்ப்புகள் எதிர் பார்க்கப்பட்ட சூழ்நிலையில், 158000 பணிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஹெல்த்கேர் திட்டம் காரணமா:
சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட ஹெல்த் கேர் திட்டம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்திட்டத்தின் மூலம் கட்டாயமாக ஒவ்வொரு கம்பெனியும் தனது ஊழியர்களுக்கு இன்ஸ்யூர் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனால் ஹோட்டல்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் புதிதாக பணிக்கு ஆள் எடுப்பதை குறைத்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மற்றொரு அறிக்கை:
மற்றொரு அறிக்கையோ இதற்கு முரணான தகவலை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புச் சந்தை முன்னேறி வருவதாகவும், அதனால் வேலையற்றோர் பெரும் சலுகை சென்ற மாதத்தை விட குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் கம்பெனிகள் அதிக வேலை வாய்ப்பை தந்து வருவது தெரிவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.