“திருமாவளவனின் 35 ஆண்டு கால சமூக நீதிக் கனவுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும்” - ஆதவ் அர்ஜுனா மெசேஜ்!
சென்னை: "விசிக தலைவர் திருமாவளவனின் 35 ஆண்டுகால சமூக நீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகளை தவெக ஆட்சி நிறைவேற்றும் என உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என தவெக எம்எல்ஏவுமான ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்கள் என 116 உறுப்பினர்களுடன் தவெக கடந்த சில நாள்களாக ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை என்ற 118 பலத்தைப் பெறப் போராடி வந்தது.

இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் இன்று மாலை தமது நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவுக் கடிதத்துடன் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் பேசினார். ஜனநாயகம் காக்கப்படும், மக்களுடைய ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்பார் என்று தெரிவித்தார்.
விசிகவின் ஆதரவு கடிதத்துடன், ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் தவெக தலைவர் விஜய். நாளை மாலை 3 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அர்லேகரிடம் தவெக தலைவர் விஜய் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், குடியரசு ஆட்சி நடைமுறைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணத்திற்காக வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாகவும், ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற 'மௌனப் புரட்சியை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப் பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் ஆதரவு அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல, எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல... விசிக தலைவர் திருமாவளவனின் 35 ஆண்டு கால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூக நீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications