ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பந்த்: கடைகள் அடைப்பு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை முடக்கோரி இன்று தூத்துக்குடியில் பந்த் நடைபெயற்று வருகிறது. இதனால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான சல்பர்டை ஆக்சைடு காற்றில் கலந்தது. இந்த விஷக்காற்றை சுவாசித்த மாநகர மக்கள் கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானார்கள். லயன்ஸ் டவுன், சண்முகபுரம், ரோச் காலனி, மடத்தூர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரம், பூச்செடி-கொடிகள் விஷக்காற்றின் தாக்கத்தால் கருகின. காற்றில் விஷவாயுவின் தாக்கம் பரவிய சம்பவம் மாநகர மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
காற்றில் விஷவாயுவை கலந்திட்ட நஞ்சுக்கழிவு நிறைந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் போராட்டம் வலுப்பெற்றது. கட்சி, மதம், இன வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் இதில் ஒன்றிணைந்து போராடினர். மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் ஆர். நல்லக்கண்ணு, வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் மற்றும் பொதுமக்கள் 780 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று, நீர் நிலைகளை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு கடந்த 30ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகலினை துணை கலெக்டர் லதா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகளிடம் வழங்கினர். மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவால் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது படிப்படியாக உற்பத்தியை நிறுத்தியது.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டதை தூத்துக்குடி மாநகர மக்கள், போராட்டக்குழுவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் நாளை (9ம் தேதி) விசாரணைக்கு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஆலையை நிரத்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கிடையே நேற்று கோரம்பள்ளம், 3ம் மைல், பழைய பஸ் நிலையம், பாளைரோடு, விஇ ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மாநகரில் பெரும்பாலான ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. மினிபஸ்களும் போராட்டத்தில் பங்கேற்றன. சில பகுதிகளில் மட்டும் ஒருசில கடைகள் திறந்திருந்தன.
கடையடைப்பு மற்றும் மினிபஸ், வாடகை ஆட்டோ போன்றவை ஓடாததால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடையடைப்பை முன்னிட்டு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாதவகையில் ஏ.எஸ்.பி மகேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் மாநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்டபடி பந்த் நடந்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications