கொளுத்தும் வெயிலால் உச்சத்திற்குப் போன காய்கறி விலை… மக்கள் புலம்பல்!
திருப்பூர்: என்ன காய் வாங்கி சமைக்கலாம் என்று யோசிக்கும் போதே விண்ணை முட்டும் விலை உயர்வு வந்து கண்ணைக் கட்டுகிறது. வெண்டைக்காய் வாங்கலாமா, பீன்ஸ் காரட் வாங்கலாமா என்றால் எதுவுமே கைக்கு அடங்காமல் கிலோ 50 ரூபாய் 100 ரூபாய் என கண்ணா மூச்சு காட்டுகிறது.
கோடை வெயில் கொளுத்தி வருவதால் உச்சத்திற்குப் போனது பழங்களின் விலைகள் மட்டுமல்ல காய்கறிகளின் விலைகளும்தான் என்கின்றனர் கடைக்காரர்கள்.
கிலோ 100 ரூபாய் விற்றாலும் வாங்கி சமைத்துதானே ஆகவேண்டும் என்கிறீர்களா? இன்றைய மார்க்கெட்டில் என்ன விலை விற்கிறது என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
கண்ணீர் வரும் வெங்காயம்
திருப்பூர் மார்க்கெட்டிற்கு ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தையில் இருந்துதான் காய்கறிகள் வருகின்றன. இங்கு சின்ன வெங்காயம் சில்லறை விலையில் கிலோ 40 ரூபாய்க்கும், பெரியவெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை சுமார்
சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் இப்போது 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடைக்கு இதமாக தக்காளி விலை கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது.
வெண்டக்காய் விலை விர்ர்…
பரிட்சை நேரம் என்பதால் வெண்டைக்காய் விற்பனை அதிகரித்துள்ளது. காலை 8 மணிக்குள் கடைக்குப் போனால்தான் வெண்டைக்காயை கண்ணால் காண முடிகிறது. இல்லை என்றால் கத்தரிக்காய்தான் கைக்கு சிக்கும். என்னதான் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையானாலும் வெண்டைக்காய்க்கு இல்லத்தரசிகளிடம் வரவேற்பு அதிகம்தான்.
காரட் விலை ரூ.50
வெண்டைக்காயை விட்டு விட்டு காரட் வாங்கலாம் என்றால் அதுவும் கையை கடிக்கிறது. கிலோ 50 ரூபாய் என்று கடைக்காரர் கூறவே இன்றைக்கு அமாவாசை அதனால் வேறு வழியில்லை விற்கும் விலைக்கு காய்கறி வாங்கித்தானே ஆகவேண்டும் என்று நொந்தபடியே காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் இல்லத்தரசிகள்.
சென்னை மார்க்கெட் நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கத்தரிக்காய் ரூ.20, வரி கத்தரிக்காய் ரூ.13, வெண்டைக்காய் ரூ.35, பீன்ஸ் ரூ.60, அவரைக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.20, காராமணி ரூ.25, மாங்காய் ரூ.15, பீர்க்கங்காய் ரூ.25, குடமிளகாய் ரூ.40, வெள்ளரிக்காய் ரூ.15, பட்டாணி ரூ.45, இஞ்சி ரூ.90, மிளகாய் ரூ.28, சுரைக்காய் ரூ.15, வேர்கடலை ரூ.45, கொத்தவரங்காய் ரூ.20, தக்காளி ரூ.8, உருளைக்கிழங்கு ரூ.18, புடலங்காய் ரூ.20, கேரட் ரூ.25 விற்பனையாகிறது.
டீசல் செலவு அதிகம்
தமிழ்நாட்டில் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் காய்கறி வருகிறது. டீசல் செலவு, கூலியாட்கள் சம்பளம் அதிகரித்துள்ளதால் காய்கறி கொண்டு வருவதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அதனால் காய்கறி விலை சற்று உயர்ந்துள்ளதாகவும் கோயம்பேடு வியாபாரிகள் கூறியுள்ளனர்.