20 ரூபாய் அரிசி திட்டம்: 17ம் தேதி சென்னையில் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்

தமிழகத்தில் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ அரிசி ரூ. 45 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், அரிசியை கிலோ 20 ரூபாய் என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, சட்டசபையில் உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து வெளிச்சந்தை விலையை விட குறைவாக ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் விலையில் ஐந்து கிலோ பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய உணவு துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 50 கடைகளும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 50 கடைகளும் திறக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா வரும் 17ம் தேதி நந்தனத்தில் உள்ள ஒரு கடையில் 20 ரூபாய் அரிசி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். மக்களின் வரவேற்பை பொறுத்து இத்திட்டம் மற்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மத்திய அரசிடம் இருந்து வெளிச்சந்தை சிறப்பு திட்டத்தின் கீழ் தரமான பொன்னி அரிசி 19 ரூபாய் என்ற விலையில் வாங்கி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதற்காக ஒரு லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த அரிசி விற்பனைக்காக தனி கடைகள் திறக்கப்படும். இதில் மற்ற பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படாது என்றார்.












Click it and Unblock the Notifications