தமிழக மீனவர்கள் சிங்கள படையினரிடம் சிக்க இலங்கை தமிழ் மீனவர்களே காரணம் - நாராயணசாமி
சென்னை: இலங்கை தமிழ் மீனவர்கள் கொடுக்கும் புகாரின் பேரில்தான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் செல்கின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்களை பிடித்து, தங்கள் வாழ்வாதாரத்தை தடுப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் புகார் செய்வதால் தான் தமிழக மீனவர்களை கைது செய்வதாக இலங்கை கூறுகிறது.
இலங்கை தமிழர்களுக்காக, தமிழகத்தில் நாம் போராடுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு எதிராக செயல்படுகின்றனர்.பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றபோது முகாம்களில் இருந்த தமிழர்களை சந்தித்து பேசியபோது, இலங்கை தமிழ் கட்சிகள், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை நாங்கள் நம்புவது இல்லை. ஆனால், இந்தியாவில் உள்ள உங்கள் கட்சி, காங்கிரஸ் கட்சியைத்தான் நாங்கள் நம்புகிறோம். நீங்கள் தான் உதவிட வேண்டும் என கூறி உள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறை காட்டாமல் போராட்டம், அறிக்கை விட்டு சென்று விடுவார்கள்.மத்திய அரசு இலங்கை தமிழர்கள் உள்ள பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட மத்திய அரசைத்தான் குறை கூறுகின்றனர்.
தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டதாக தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிக அளவில் சமையல் எரிவாயு வழங்கப்பட்டால், மண்எண்ணெய் அளவு குறைக்கப்படும்.
சமையல் எரிவாயு குறைவாக வழங்கப்படும் மாநிலங்களுக்கு அதிகமாக மண்எண்ணெய் வழங்கப்படும்.ஆதார் கார்டு மூலம் மத்திய அரசின் மானிய தொகைகளை உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டத்தில் நேரடியாக வழங்கப்படும். அப்போது இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.
டெல்லியில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சென்ற அமைச்சர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றார் அவர்.