லயோலா மாணவர்கள் திமுகவில் சேர்ந்து விட்டார்களா?... திமுகவுக்கு மாணவர்கள் கண்டனம்!
நெல்லை: சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் திமுகவில் இணைந்து விட்டதாக கலைஞர் டிவியில் தொடர்ந்து செய்தி வெளியிட்டது திசை திருப்பும் செயல் என்று லயோலா கல்லூரியின் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜோ பிரிட்டோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
7000 பேருக்கு மேல் படிக்கும் லயோலா கல்லூரியிலிருந்து ஒரு சில மாணவர்கள் தங்கள் கட்சியின் மாணவரணியில் சேர்ந்த செய்தியை, தமிழீழ விடுதலைக்காக தமிழக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களது கட்சி சார்ந்த தொலைக்காசியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஏதோ போராட்டத்தை துவக்கிவைத்த லயோலா கல்லூரி மாணவர்களே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதைப் போல பொது மக்களிடையே ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் சிலர்.
ஐநா தீர்மானத்துக்கு பிறகு நீர்த்துப்போய்விடும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தொடரும் மாணவ போராட்டத்தை கண்டு செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
மார்ச் 8ஆம் தேதி துவங்கி தமிழகம் முழுதும் பரவியிருக்கும் தமிழீழ விடுதலைக்கான இந்த மாணவர் போராட்டம் தங்கள் இலக்கை அடையாமல் ஓயாது என்று அவர் கூறியுள்ளார்.