அப்சல் குரு, கசாப் போல புல்லரையும் ரகசியமாக தூக்கில் போட மத்திய அரசு திட்டம்
பாட்டியாலா: தீவிரவாதி புல்லரை ரகசியமாக தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக செய்தி பரவுவதால், அதனால் பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 1993-ம் ஆண்டு கார் குண்டு வெடிப்பு மூலம் 9 பேரை கொன்ற காலிஸ்தான் தீவிரவாதி புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு மீது முடிவு எடுக்க பல ஆண்டுகள் தாமதமானது. கருணை மனுவை பல ஆண்டுகள் கழித்து ஜனாதிபதி நிராகரித்ததால் தனது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி புல்லர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.
காப்பாற்றும் முயற்சி:
இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து புல்லரை காப்பாற்ற பல்வேறு சீக்கிய அமைப்புகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. புல்லரின் மனுவை மறு ஆய்வு செய்ய கோரி சிரோமணி அகாலி தளம் கட்சி மனு செய்ய திட்டமிட்டுள்ளது.
ரகசிய ஏற்பாடு:
இந்த நிலையில் தேவேந்தர் பால்சிங் புல்லரை ஜெயிலில் மிக, மிக ரகசியமாக தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புல்லரை தூக்கிலிடும் நாள் மற்றும் நேரத்தை சிறைத்துறை ரகசியமாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. புல்லரை தூக்கில் போட்டால் பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு:
இதையொட்டி பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் முழுவதும் துணை நிலை ராணுவ வீரர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.