மலையாளிகளுக்கு சாதகமாக திரிக்கப்படும் குமரி மாவட்ட வரலாறு: ராமதாஸ் கடும் தாக்கு
சென்னை: மலையாளிகளுக்கு சாதகமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு திரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு மலையாளிகளால் தொடர்ந்து திரிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடி மக்கள் நாடார்கள் தான் என்ற நிலையில், நாயர்கள் தான் குமரி மாவட்டத்தின் பூர்வ குடிமக்கள் என்றும், நாடார்கள் வந்தேரிகள் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தயாரித்த 9ம் வகுப்பு பாடநூலில் திரித்து எழுதப்பட்டிருந்தது.
வரலாற்றைத் திரித்த ஜானகி நாயர் என்ற மலையாளி...
ஜானகி நாயர் என்ற மலையாள பேராசிரியர் தான் இதைத் திரித்து எழுதினார் என்பதை கடந்த ஆண்டு நான் அம்பலப்படுத்தினேன். அதன் பின்னர் ஒட்டு மொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்ததை அடுத்து, இந்தத் தவறை திருத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புக்கொண்டது.
அதற்குப் பிறகும் நாடார் சமுதாயத்தை சிறுமைப்படுத்தி, நாயர் சமுதாயத்தை உயர்த்திப் பிடிக்கும் செயல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
முக்கிய காரணம் வேலுத்தம்பி தளவாய் நாயர்...
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேலுத்தம்பி தளவாய் நாயர் என்ற மலையாளி. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதியாக பொறுப்பு வகித்த இவர் தான் 1809ம் ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட தமிழர்களை வெட்டிப் படுகொலை செய்து கடலில் வீசியவர். தமிழர்களுக்கான வரியை இரட்டிப்பாக்கி கொடுமைப்படுத்தியவர்.
கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவிய மலையாளி...
வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்த ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்தவரும் இவர் தான். தமிழினத்தை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டிருந்த இவரை ஆங்கிலேயர்களை வீழ்த்திய வீரன் என்று ஒரு புறம் போற்றிக் கொண்டு, மறுபுறம் அனந்த பத்மநாப நாடாரின் சாதனை வரலாற்றை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் நாயர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது...
இதற்கு தமிழக அரசும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போயிருக்கிறது என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.
குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனந்த பத்மநாப நாடாரின் நினவாக அமைக்கப்பட்டு, பின்னர் நாயர்களால் சிதைக்கப்பட்ட கட்டிடங்களை சீரமைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக முந்தைய தி.மு.க. ஆட்சியில் வேலுத்தம்பி தளவாய் நாயருக்கு குமரி மாவட்டம் தலக்குளத்தில் ரூ.1.5 கோடியில் நினைவு இல்லமும், ரூ.35 லட்சத்தில் 7 இடங்களில் நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டன.
வேலுத்தம்பி தளவாய் நாயரின் நினைவிடங்களை அகற்ற வேண்டும்...
இவ்வாறாக, குமரி மாவட்டத்தில் நாயர்களை பெருமைப்படுத்தி, நாடார்களை அவமதிக்கும் வகையில் வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்கக்கூடாது. குமரி மாவட்டத்தில் வேலுத்தம்பி தளவாய் நாயர் உள்ளிட்ட மலையாளிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும்; புதிதாக எதையும் அமைக்கக் கூடாது.
அனந்த பத்மநாப நாடாருக்கு நினைவு இல்லம் வேண்டும்...
அதேநேரத்தில் டச்சுப் படையை வென்ற அனந்த பத்மநாப நாடாருக்கு தச்சன்விளையில் நினைவு இல்லமும், நுழைவு வாயிலும் அமைக்கப்பட வேண்டும். களியக்காவிளையில் உருவச் சிலை அமைப்பதுடன், அஞ்சல் தலையும் வெளியிடச் செய்ய வேண்டும்.
மேலும், குமரி மாவட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதைக்காகவும் போராடிய அய்யா வைகுந்தர், மார்ஷல் நேசமணி, வெள்ளையன் நாடார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.