கேரளாவில் தோழிகள் முன்பு கணவர் திட்டி, அடித்ததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரியில் பல பேர் முன்பு கணவர் தன்னை திட்டி தாக்கியதால் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு தடுத்தறை பகுதியைச் சேர்ந்தவர் சிஜி(22). கல்லூரி மாணவி. அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சணல் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சிஜி கல்லூரி படிப்பை தொடர்ந்தார். குடிப்பழக்கம் உள்ள சணல் சிஜியை அடித்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதனால் சிஜி தனது தாய் வீ்ட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்து கல்லூரிக்கு சென்றார். இந்நிலையில் சணல் கல்லூரிக்கு சென்று சிஜியை பிற மாணவிகள் முன்பு திட்டியதோடு அடித்தார்.
கல்லூரியில் அனைவர் முன்பும் அடி வாங்கிய சிஜி அவமானத்தில் அங்கிருந்து அழுது கொண்டே ஓடினார். நெடுமங்காடு காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி புகார் கொடுத்தார். அதன் பிறகு வீட்டுக்கு சென்ற அவர் குளியல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிஜி தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த சணல் தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சணலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications